நீதித்துறை உள்ளிட்ட அனைத்தும் சுயாதீனமாக இயங்க வேண்டும் - யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகோள்!

நீதித்துறை உள்ளிட்ட அனைத்தும் சுயாதீனமாக இயங்க காத்திரமான செயற்பாட்டினை முன்னெடுத்து இலங்கையினை முன்னோக்கி பயணிக்க உதவிட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீதித்துறை உள்ளிட்ட அனைத்தும் சுயாதீனமாக இயங்க வேண்டும் - யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகோள்!

நீதித்துறை உள்ளிட்ட அனைத்தும் சுயாதீனமாக இயங்க காத்திரமான செயற்பாட்டினை முன்னெடுத்து இலங்கையினை முன்னோக்கி பயணிக்க உதவிட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களும், சுயாதீனமற்ற அரச இயந்திரமும் எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில், யாருக்கும் அடிபணியாமல் நீதி வழுவாது தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா, அரசியல் அழுத்தங்களாலும் உயிர் அச்சுறுத்தல் காரணமாகவும்  மன அழுத்தத்திற்கு உள்ளாகி விரக்தியினால் பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறி  உள்ளமை அனைவர் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இலங்கையின் நீதிப் பொறிமுறையின் சுயாதீனத் தன்மை அற்ற நிலையை மீண்டும் ஒரு தடவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 

இது போன்று யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கலாநிதி குருபரனும், அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு ஒன்றில் முன்னிலையானதற்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு புதிய சுற்றுநிருபம் ஒன்றினை வெளியிட்டு வழக்கிலிருந்து விலக நெருக்கடி கொடுத்த நிலையில், அவர் விரிவுரையாளர் பதவியினை துறந்தார் என்பதனை நினைவுபடுத்தவும், நாட்டின் இன்றைய நிலைக்கும், இனப்பிரச்சினைக்கும் சுயாதீனமற்ற நீதித்துறையும் ஒரு காரணமாகும் என்பதனை சுட்டிக்காட்டவும் நாம் விரும்புகின்றோம்.

நீதித்துறையைச் சார்ந்த நீதிபதி சரவணராஜா மட்டுமல்ல இலங்கை அரச இயந்திரத்தின் சகல துறைகளும் அரசினதும் பேரினவாத சக்திகளினதும் அரசியல் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகின்றமை என்பது ஒரு புதிய விடயமல்ல. காலா காலமாக நடைபெறுகின்ற ஒரு விடயமே. 

இதனால் தான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல், இறுதி யுத்தம் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு உள்ளக விசாரணையை மறுத்து சர்வதேச விசாரணையை பாதிக்கப்பட்ட தரப்புக்கள் கோருகின்றன.

இலங்கை நாடும், நாட்டின் மக்களும் இன்று எதிர்கொள்கின்ற பாரிய பொருளாதார நெருக்கடிகளின் மத்தியிலும் அரசும், பேரினவாத சக்திகளும் எவ்வித மாற்றமும் இன்றி முன்னரை விட மோசமாக செயற்படுவது நாட்டை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்பதோடு, அரசு தனது கையறு நிலையை மறைப்பதற்கும், பொது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்குமே இவ்வாறான உணர்ச்சிகரமான, இன முறுகல் நிலைகயை ஊக்குவிப்பதோடு, அவற்றிற்குத் துணையும் போகின்றது என்பதனை இனம், மதம் என சகல வேறுபாடுகளையும் கடந்து அனைத்து மக்களும் புரிந்துகொண்டு செயலாற்றினால் தான் இலங்கை என்ற எமது நாடு மீட்சியடையும்.

எனவே இலங்கை மற்றும் சர்வதேச முற்போக்கு சக்திகள் இணைந்து இந்நிலையைச் சீர் செய்ய, நீதித்துறை உள்ளிட்ட அரச இயந்திம் அனைத்தும் சுயாதீனமாக இயங்க காத்திரமான செயற்பாட்டினை முன்னெடுத்து இலங்கையினை முன்னோக்கி பயணிக்க உதவிட பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகின்றது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.