சரிந்து வீழ்ந்த மரங்கள் - மண்சரிவுகளால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை மற்றும் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மலையக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

சரிந்து வீழ்ந்த மரங்கள் - மண்சரிவுகளால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

 மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும், மண் மேடுகள் சரிந்தும் வீழ்ந்தமையினால் இன்று (05) பல வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டதுடன், மலையகப் ரயில் சேவைகளும்  தடைப்பட்டன. 

இன்று காலை தலவாக்கலை வட்டகொடை நிலையங்களுக்கிடையில் ரயில் தடம்புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. 

நுவரெலியா நகரில் வீசிய பலத்த காற்று காரணமாக அப்பகுதியிலுள்ள பல வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் மின்கம்பங்களும் முறிந்து விழுந்தமையால் மின்சாரமும் தடைப்பட்டன.

பல வீதிகளின் போக்குவரத்தும்  தடைப்பட்டுள்ளன. தற்போது பெய்து வரும்  கடும் மழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக மலையக தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தோட்ட தொழிலாளர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் கடும் சிரமங்களையும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொள்வதை  காணக்கூடியதாக இருந்தது. 

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் மரங்கள் ஆங்காங்கே முறிந்து வீழ்ந்தமையால் மலையகத்தில்  பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. 

அந்தவகையில் இன்று பிற்பகல் தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்தமையால் அவ்வழி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கைகளில் பிரதேச மக்களும் தலவாக்கலை பொலிஸாரும் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இன்று அதிகாலை 2 மணியளவில் தலவாக்கலை பிரதேசத்தில்  தடைப்பட்ட மின்சாரம் இன்று மாலை வரை வழங்கப்படவில்லை. 

மேலும் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேக்லி தோட்ட குடியிருப்பொன்றின் மீது இன்று (5) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

இந்த அனர்த்தம் ஏற்படும்போது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும் வீட்டின் சமையலறை மற்றும் படுக்கையறை முற்றாக சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

இங்கு வசித்தவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடும் மழை காரணமாக மலையகத்தில்  மரக்கறி பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.