வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி விரைவில்!

வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி விரைவில்!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே  இடம்பெறுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். 

வீதி விபத்துக்களை குறைப்பதற்கு வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனைத் தெரிவித்தார். 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன,

“போக்குவரத்துத் துறையில் செயல்திறனை உருவாக்க பல திட்டங்களைத் தொடங்கியுள்ளோம்.

இதேவேளை, கடவத்தை பேருந்து நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. 

இந்தப் பேருந்து நிலையங்களில் நவீன போக்குவரத்து முகாமைத்துவ முறைகளும், நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

2023இல் 2214 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துகளில் 2321 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த ஆண்டும் கடந்த மாதம் 30 ஆம் திகதிவரை 1103 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துகளால் 1154 பேர் உயிரிழந்துள்ளனர். 

எனவே, இந்நிலைமையைக் குறைக்க எமது அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டுக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் ரூபாயை இலங்கை பொலிஸாருக்கு வழங்க வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.

அத்துடன், போக்குவரத்து அமைச்சின் தலையீட்டுடன், வீதி வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்பட உள்ளது.

பாடசாலை மட்டத்தில் வீதிப் பாதுகாப்பு கழகங்களை (Road Safety Club) நிறுவுவதற்கு தேவையான கையேடுகளை ஆசிரியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது ஒரு இணைச்செயற்பாடாக பாடசாலைக் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதற்கு இணையாக பதக்கம் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் தொழிற்சங்க பணிப்பகஷ்கரிப்பு தொடர்பான தீர்வுகளை வழங்குவதில் தற்போது ஈடுபட்டுள்ளோம். 

05 வருடங்களுக்கு ஒருமுறை நிலைய அதிபர்களின் பதவி உயர்வுக்கு தேவையான அனுமதியை அரச சேவை ஆணைக்குழு ஏற்கனவே வழங்கியுள்ளது. அதற்கான அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்குத் தேவையான அமைச்சரவைப் பத்திரம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

ஆனால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகஷ்கரிப்பு வெறும் அரசியல் நோக்கத்திற்காகவே என்பது தற்போதுது மக்களுக்கு தெளிவாகியுள்ளது. 

வேலைநிறுத்தங்கள் உண்மையான தொழிசங்க உரிமைகளுக்காக நடத்தப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்” என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மேலும் தெரிவித்தார்.