சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியின்றி அபாயகரமான பொருட்கள் அடங்கிய கப்பல் எவ்வாறு நாட்டுக்குள் வர முடியும் - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு 

சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியின்றி அபாயகரமான பொருட்கள் அடங்கிய கப்பல் எவ்வாறு நாட்டுக்குள் வர முடியும் - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு 

இலங்கைக்கு வருகை தந்து கொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ள சிங்கப்பூர் சரக்கு கப்பலில்  பாரியளவிலான வெடிபொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் அடங்கிய கொள்களன்கள் இருப்பதாக தெரியவருகிறது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியின்றி எவ்வாறு இதற்கு அனுமதி வழங்கியது என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அதேநேரம்  இது குறித்து முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் விபத்துக்குள்ளான சிங்கப்பூர் சரக்கு கப்பலான டாலி, 764 தொன் அபாயகரமான பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் 4,700 கொள்கலன்கள் இருந்தன. அவற்றில் 56 வெடிபொருட்கள், லித்தியம் அயன் பேட்டரி, எரியக்கூடிய பொருட்கள் போன்ற அபாயகரமான பொருட்கள் மற்றும் 9 ஆவது வகை அல்லது கடுமையான ஆபத்தான பொருட்கள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

4,644 ஏனைய கொள்கலன்கள் பகுப்பாய்வு  செய்யப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரிய கடற்படைத் தளங்களான நியூயோர்க், விர்ஜினியா, நோர்போக் போன்ற இடங்களுக்குச் சென்று இந்தக் கப்பல் கொழும்பு நோக்கி வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாசல் சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம் துறைமுகத்தில் இறக்குமதி, ஏற்றுமதி, பரிமாற்றம் மற்றும் நிறுத்தி வைத்தல் ஆகிய 4 விடயங்களிலும் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதற்கான அனுமதியை வழங்க வேண்டும். ஆனால் இதற்கான அனுமதி மத்திய சுற்றாடல் அதிகார சபையிடமிருந்து பெறப்படவில்லை.

 நாட்டில் யாருக்கும் தெரியாமல் இவ்வாறான பொருட்கள் அனுப்பப்படுவதில்லை. அதனால் இது பயங்கரமான நிலை. இந்த கப்பல் விபத்துக்குள்ளானதாலேயே இந்த கப்பல் இலங்கைக்கு வருகின்ற கப்பல் என எமக்கு தெரியவந்தது. இல்லாவிட்டால் இந்த கப்பல் தொடர்பான எந்த தகவலும் எமக்கு தெரியாமல் இருந்திருக்கும்.

இந்த ஆபத்தான நிலை குறித்து ஒரு நாடு என்ற ரீதியில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியின்றி எவ்வாறு இவ்வாறான தீங்கு விளைவிக்கும் பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை நாம் ஆராய வேண்டும் 

2013 இல் உருவாக்கப்பட்ட வணிக மைய ஒழுங்குமுறை மூலம் சில விதிகள் அமுல்படுத்தப்படாமல் பொருட்கள் மற்றும் பண்டங்கள் நாட்டிற்கு வருகின்றன. இந்த குறைபாட்டை பயன்படுத்தி, 263 குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள் கூட நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அப்போது சிரமப்பட்டு அக்குப்பைகள் திருப்பி அனுப்பப்பட்டதால் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். 

அரசாங்கம் பசுமைக் கொள்கையை கடைபிடித்து சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட்டு வருவதால் இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும், இது பாரிய குற்றச் செயலாகும்.  இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி ஆராயவேண்டும் வேண்டும் என்றார்.