கிளிநொச்சியில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

கிளிநொச்சியில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) கிளிநொச்சி (Kilinochi) மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நேற்று (23) குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

அஞ்சலி நிகழ்வு

நினைவேந்தல் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் (Shritharan), வடக்கு மாகாணசபையின் மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.

இதன்போது, அண்மையில் மறைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் (R.Sampanthan) மற்றும் தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவரும், ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளுள் ஒருவருமான தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொட மகேஸ்வரன்) அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.