தேசபந்து தொடர்பில் தகவல் தெரிந்தால் சிஐடியிடம் தெரிவிக்கவும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால், உடனடியாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக அவரைச் சுற்றி வளைத்த இடங்கள் தேடப்பட்டு வந்தாலும், அவர் இன்னும் தலைமறைவாகவே இருப்பதாகவும், தமக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, தேசபந்து தென்னகோன் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்சந்தேக நபரின் தொலைபேசி பதிவுகள் மற்றும் அவர் இருக்கும் இடங்கள் அனைத்தையும் இலங்கை பொலிஸ்சார் விசாரிக்கும் என்றும் அவரை காப்பாற்ற உதவி செய்பவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 209 இன் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது தேசபந்து தென்னகோன் தொடர்பான எந்தவொரு தகவலையும் நேரடியாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்புமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.