சுதந்திர தினத்தினை வடக்கு - கிழக்கில் கறுப்பு நாளாக அனுஷ்டிக்க அழைப்பு!

சுதந்திர தினத்தினை வடக்கு - கிழக்கில் கறுப்பு நாளாக அனுஷ்டிக்க அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினத்தை வடக்கு, கிழக்கு முழுவதும் கறுப்பு நாளாக பிரகடனப்படுத்துவதுடன், மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் சாத்வீக போராட்டங்களை நடத்தப் போவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை ஆட்சி செய்கின்ற அனைத்து அரசாங்கங்களும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும், குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் மௌனம் சாதிப்பதை கண்டித்தும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.  

நாட்டில் 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இன்று வரை நீதி கிடைக்காத பின்னணியில், தமக்கு சுதந்திர தினம் கிடையாது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் காணப்பட்ட இனப் பிரச்னையை அடுத்து இடம்பெற்ற உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றஞ்சுமத்தி, யுத்தம் முடிவடைந்த காலம் தொடக்கம் இன்று வரை அவர்களின் உறவினர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் பிரகடனப்படுத்தி போராட்டங்களை நடத்துவது வழமையானதாக காணப்பட்டது.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கடந்த காலங்களில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாக்குகளை அளித்து அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் அரசாங்கத்துக்கு வாக்களித்து அரசுக்கு எதிராகவே இந்தப் போராட்டத்தை நடத்த முற்படுகின்றனர்.