அரசியல் நலன்களுக்காக ஆய்வுகளை நிறுத்த முடியாது. - அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்

அரசியல் நலன்களுக்காக ஆய்வுகளை நிறுத்த முடியாது. - அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்

பொன்னாவெளி பிரதேசத்தில் சீமேந்து தொழிற்சாலையை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்பில் சில அரசியல் தரப்புக்களினால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் உண்மைகளை அறிவதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சுயலாப அரசியலுக்கான கபடத்தனங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பொன்னாவெளிப் பிரதேசத்தில் சீமேந்து தொழிற்சாலை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் இன்று  மேற்கொள்வதற்கு அதிகாரிகள் முற்பட்ட வேளை, சில அரசியல் தரப்புக்களினால் தவறாக வழிநடத்தப்பட்ட சிலர், ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கு  அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி ஆய்வின் நோக்கம் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக குறித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நிதானமான முறையில் கலந்துரையாடி உண்மைகளை புரிந்து கொள்ளமுடியாத நிலையிலேயே அங்கிருந்த பலர் காணப்பட்டனர்.

இதனால், குறித்த தரப்பினருக்கு உண்மைகளை தெளிவுபடுத்துவது உடனடியாக சாத்தியமில்லை என்பதை புரிந்துகொண்ட அமைச்சர், தன்னுயை முயற்சியை இடைநிறுத்தி திரும்பிய போதிலும், மக்களுக்கு நன்மைகளை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையான ஆய்வு நடவடிக்கைகளை தொடர்வதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.