முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகளும் இரத்து!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகளும் இரத்து!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குடிவரவு குடியகல்வு திணைக்கள தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரும் தலைமை அதிகாரியுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

இதன்படி, அரசியலமைப்பு பேரவையிலுள்ள சபாநாயகர், பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதன் மூன்று உறுப்பினர்களைத் தவிர 219 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்படுள்ளன.

வழக்கமான முறைப்படி, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த இராஜதந்திர கடவுச்சீட்டு சலுகைகள் உண்டு.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவி அல்லது கணவர்களும் குறித்த சிறப்புரிமைக்கு உரிமையுடையவர்களாவர்.

இதேவேளை, பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விமான அனுமதிப்பத்திரங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சமிந்த குலரத்ன மேலும் தெரிவித்தார்.

இதனால், முன்னாள் அமைச்சர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்துச்  செய்யப்பட்டமை தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.