சிறப்பாக வழிநடத்தக்கூடிய தலைவர்களையே மக்கள் தெரிவு செய்வது அவசியம் -  விஜயதாச ராஜபக்ஷ

சிறப்பாக வழிநடத்தக்கூடிய தலைவர்களையே மக்கள் தெரிவு செய்வது அவசியம் -  விஜயதாச ராஜபக்ஷ

சமூகத்தில் போதைப் பொருள் செயற்பாடுகளை தடுப்பதற்கும் இன நல்லிணக்கம் சகவாழ்வு ஊடாக கிராமங்கள் அபிவிருத்தி செயற்பாடுகளை திறமாக முன்னெடுப்பதற்கு சர்வமத நல்லிணக்க சகவாழ்வு மன்றங்களின் செயற்பாடு முக்கியமானதாகும். 

அத்துடன், நாட்டை சிறப்பாக வழிநடத்தக்கூடிய தலைவர்களையே மக்கள் எதிர்காலத்தில் தெரிவு செய்வது முக்கிய மானதாகும் என  நீதி அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷ நேற்று (24) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.

கிராமிய வீதிகள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின்  அழைப்பின் பேரில் அவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

அமைச்சருடன், நீதி மற்றும்  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் அனுராதா ஜெயரத்ன, செயலாளர் எம்.என்.ரணசிங்க ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் மதத் தலைவர்கள் உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மதத் தலைவர்களின் வழிநடத்தலின் கீழ் இந்தக் குழுக்கள் கிராமங்களின் அபிவிருத்திக்காகவும் இன நல்லிணக்கத்திற்காகவும் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் வகையிலும் எதிர்காலத்தில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்தார். 

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்  சகல பிரதேச செயலக பிரிவிலிருந்தும் சர்வமத நல்லிணக்க சகவாழ்வு மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட மதத் தலைவர்கள் உறுப்பினர்களுக்கான நியமனங்களையும் அவர் இதன்போது வழங்கி வைத்தார்.