கண்டி மக்களின் அடையாளத்தை மனோ கணேசன் போட்ட பிச்சை என குறிப்பிடுவது கண்டிக்கத்தக்கது - வேலு குமார்

கண்டி மாவட்ட பொது மக்கள், இளைஞர், யுவதிகள் பாடுபட்டு பெற்றுக் கொண்ட அடையாளத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தான் போட்ட பிச்சையாக சுட்டிக் காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் இந்த கூற்று முற்று முழுதாக தமிழ் பேசும் மக்களை இழிவுபடுத்தும் செயற்பாடாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட ரீதியாக பொது மக்களின் வாக்குகளை தேசிய கட்சி ஒன்றுக்கு பெற்றுக் கொடுத்து அதன் ஊடாக தமக்கான சலுகைகளை பெற்றுக் கொள்ளும் சுயநல முயற்சியே இதுவரை இடம் பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.