நஸீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபாய் நட்டஈடு கோரும் கிழக்கு ஆளுநர்!

சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபாய் நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக சட்டக்கோரல் அறிவித்தலை அனுப்பியுள்ளார்.

நஸீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபாய் நட்டஈடு கோரும் கிழக்கு ஆளுநர்!

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடந்த மாதம் 11ம் திகதி இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் பொய்யான கருத்துக்களையும் அரச தொழில் இடமாற்றங்கள் குறித்து பிழையான தகவல்களையும் வெளியிட்டு அவற்​றை கிழக்கு மாகாண ஆளுநருடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நட்டஈட்டைக் கோரியுள்ளார்.

அத்துடன் இந்த அறிவித்தல் கிடைக்கப் பெற்று 14 நாட்களுக்குள் 25 கோடி ரூபா நட்டஈட்டுத் தொகையை கிழக்கு மாகாண பாடசாலை வளர்ச்சிக்கு வழங்குமாறும் இல்லையேல் நசீர் அஹமட் மீது மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் எச்சரித்துள்ளார்.

நசீர் அஹமட் வழங்கும் நட்டஈட்டுத் தொகை கிழக்கு மாகாணத்தில் உள்ள 10 முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அந்த பாடசாலைகளின் பெயர் பட்டியலையும் தமது சட்டக்கடிதத்தில் இணைத்துள்ளார்.

குறித்த கடிதத்தின் நகல் செய்தியின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி வலயக் கல்வி பணிப்பாளராக தற்காலிக நியமனம் பெற்றிருந்த அதிபர் சேவை தரத்தில் இருந்த ஒருவர், அந்தப் பதவிக்கு தகுதியான கல்வி நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட பின் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த விடயத்தை அரசியல் ரீதியில் நோக்கிய அமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுநர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகப்படுத்தி இந்த இடமாற்றத்தை செய்ததாக கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

அது மாத்திரமன்றி கிழக்கு மாகாண கல்வி செயலாளரை ஒரே இரவில் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

எனினும் அமைச்சர் நசீர் அஹமட் கூறியதற்கு பதிலாக கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதும் உள்ள அரச ஊழியர்களின் எதிர்ப்புக்கு உள்ளானார்.

கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் கூட நசீர் அஹமட்டின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இந்த சூழ்நிலையிலேயே அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு, கிழக்கு மாகாண ஆளுநரின் சட்டக்கோரல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Files