மூன்றாவது முறையாக பிரதமரான மோடி!

மூன்றாவது முறையாக பிரதமரான மோடி!

மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி(Narendra Modi) பதவியேற்றுக் கொண்டார். 

ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

வழமையை விட இம்முறை அதிகமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 543 தொகுதிகளில் 240 இடங்களையே அந்த கட்சி பெற்றது.

அதேநேரம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. அத்துடன் புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் அந்த கூட்டணி தொடங்கியது.

பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்க இந்த கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அத்துடன் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை அந்த கட்சிகள் தேர்வு செய்தன. இதைத்தொடர்ந்து பா.ஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் கூட்டணியின் நாடாளுமன்றக்குழு தலைவராக (பிரதமர்) மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பா.ஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை வழங்கினர்.

மேலும் பிரதமர் மோடியை ஆதரிக்கும் எம்.பி.க்களின் கையெழுத்து போட்ட கடிதங்களையும், ஜனாதிபதியிடம் அவர்கள் அளித்தனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மாலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று  முர்முவை சந்தித்தார். அத்துடன் ஆட்சியமைப்பதற்கான உரிமையும் கோரினார்.

இதை ஏற்று பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.

ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து மத்திய மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கும் ஜனாதிபதி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல்வேறு அண்டை நாட்டு தலைவர்கள் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரதமர் மோடியை வாழ்த்தினர்.

இந்த விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.