கனடாவில் கொலைகள் - சந்தேகநபர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

கனடாவில் கொலைகள் - சந்தேகநபர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

கனடாவில் ஒட்டாவா புறநகர் பகுதியில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (14) மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கனடாவில் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவனில் வசித்து வந்த இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் உட்பட 6 பேர் கடந்த ஆறாம் திகதி கொலை செய்யப்பட்டனர்.

குறித்த கொலைகளுடன் தொடர்புடையவர் என கூறப்படும் 19 வயதுடைய மாணவன் அவர்களை கூரிய ஆயுதத்தினால் குத்திகொன்றதாக ஒட்டாவா காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த சம்பவத்தில் காயமடைந்த குடும்பத்தின் தந்தையான தனுஷ்க விக்ரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கொலைகளை செய்ததாகக் கூறப்படும் 19 வயதுடைய பெப்ரியோ டி சொய்சாவிடம் ஒட்டாவா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் தாய் மற்றும் தந்தையின் வசிப்பிடம் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள ஒட்டாவாவிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அன்சுல் ஜான் அவரது உறவினர்கள் எவரும் உயர்ஸ்தானிகரகத்தை தொடர்பு கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.