பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படவில்லை - வடிவேல் சுரேஷ்

ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படவில்லை எனவும், இணை அமைப்பாளர் ஒருவரையே கட்சி நியமித்துள்ளது எனவும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படவில்லை - வடிவேல் சுரேஷ்

ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதிக்கான புதிய அமைப்பாளராக லெட்சுமனார் சஞ்சய், கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் வைத்து கட்சியின் தலைவரால் இது தொடர்பான நியமனக் கடிதம் தனக்கு வழங்கிவைக்கப்பட்டது என லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

"ஊவா மாகாணத்தில் குறிப்பாக பசறை தேர்தல் தொகுதியில் உள்ள மக்களுக்கு சேவையாற்றுவதற்கு சரியான தலைமைத்துவம் இல்லை. அதேபோல இளைஞர்களின் கைகளிலேயே மாற்றம் தங்கியுள்ளது. 

கடந்த காலங்களில் பதுளை மாவட்ட மக்களுக்கு என்னால் முன்னெடுக்கப்பட்ட சேவைகளைக் கருத்திற்கொண்டு பசறை தொகுதி அமைப்பாளராக எதிர்க்கட்சி தலைவர் என்னை நியமித்தார்." - எனவும் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட வடிவேல் சுரேஸிடம் வினவியபோதே, தான் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை எனவும் இணை அமைப்பாளர் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.