மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்

அடக்குமுறைக்கு எதிரான படங்களை இயக்கி வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ YouTube தளத்தில் மலையகம் சார்ந்த ஆவணப்படமான ‘கொக்கரிப்பு’ என்கிற ஆவணப்படம் இன்றிரவு 7 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
நாடகக் கலைஞர் இராசைய்யா லோகாநந்தன் மற்றும் அவரது நாடகக் குழுவினர் “லயத்துக் கோழிகள்” என்கிற நாடகம் ஒன்றை தான் பிறந்து வளர்ந்த அவரது சொந்த ஊரான பொகவந்தலாவை – கொட்டியாகலை மக்களுக்கு காண்பிக்க முயற்சிக்கும்போது தோட்ட நிர்வாகமும் இலங்கையின் பாதுகாப்புத் தரப்பும் அவர்களுக்கு பல தடைகளை ஏற்படுத்தியிருந்தன.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 2023ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தபோதிலும் இரண்டு வருடங்கள் கடந்தும் எந்தவிதமான விசாரணைகளும் இதுவரையில் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்கவில்லை.
எவ்வாறாயினும், இச்சம்பவம் நடக்கும்போது அங்கிருந்த ஆவணப்பட தயாரிப்பாளரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெனோசன் நடந்த சம்பவங்கள் அத்தனையையும் தனது கமராவில் பதிவு செய்து பின்னர் அதனை ஒரு ஆவணப்படமாக வெளியிட்டிருந்தார்.
சர்வதேச அளவில் இந்த ஆவணப்படும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ YouTube தளத்தில் அதனை வெளியிட நீலம் அமைப்பு தீர்மானித்துள்ளது.
இது பற்றி நீலம் அமைப்பின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.
“நாடகக் கலைஞர் லோகாநந்தன் “லயத்துக் கோழிகள்” என்கிற நாடகம் ஒன்றை தான் பிறந்து வளர்ந்த மண்ணில், சொந்த மக்களுக்கு காண்பிக்க முயற்சிக்கும்போது தோட்ட நிர்வாகமும் இலங்கையின் பாதுகாப்புத் தரப்பும் ஆடிய ‘நாடகம்’ பற்றிய ஆவணப்படமே ‘கொக்கரிப்பு’.
பொகவந்தலாவை – கொட்டியாகலையில் இடம்பெற்ற படுமோசமான அடக்குமுறையை பற்றிய இந்த ஆவணப்படம் சர்வதேச அளவில் கலை வெளிப்பாட்டிற்கான அச்சுறுத்தலை ஆவணப்படுத்துகிறது.”
இந்தியாவின் தேயிலை தோட்டங்களில் வாழும் மக்கள் முகங்கொடுத்து வரும் அடக்குமுறைகளுக்கு எதிராக நீலம் அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற நிலையில் மலையகம் மீதான அரச அடக்குமுறைகள் பற்றி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்பு ஒன்றை நீலம் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.