இன்று இலங்கை வருகிறார் IMFஇன் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத்

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் டாக்டர் கீதா கோபிநாத் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (15) நாட்டிற்கு வருகை தர உள்ளார்.
தனது விஜயத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது: கடன் மற்றும் நிர்வாகம்" என்ற மாநாட்டில் டாக்டர் கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.
IMF ஆதரவுடன் கூடிய சீர்திருத்தத் திட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில் நடைபெறும் இந்த மாநாடு, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் உள்ள அனுபவங்கள், கடன் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகம் மற்றும் வரவிருக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த விஜயத்தின் போது, IMF இன் முதல் துணை நிர்வாக இயக்குநர் இலங்கையுடனான IMF இன் தற்போதைய உறவு குறித்து இலங்கை அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவும், பிற முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கிறார்.
2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றும் முதல் துணை நிர்வாக இயக்குநர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறை என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த விஜயம் என்று இலங்கை மத்திய வங்கி கூறுகிறது.