கொழும்பு போக்குவரத்து தொடர்பில் விசேட அறிவிப்பு - மாலினி பொன்சேகாவின் இறுதி ஊர்வலம்

மறைந்த இலங்கையின் மூத்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றி இன்று (26) வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
மறைந்த நடிகையின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 04.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை சுதந்திர சதுக்கத்தில் அரசு மரியாதையுடன் நடைபெறும்.
நேற்று பொதுமக்கள் பார்வைக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், இன்று காலை சுதந்திர சதுக்கத்திற்கு கொண்டு செல்லப்படும்.
“இலங்கை சினிமாவின் ராணி” என்று போற்றப்படும் மாலினி பொன்சேகா, தனது 78 ஆவது வயதில் கொழும்பில் சனிக்கிழமை காலமானார்.
150 க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் ஏராளமான பாராட்டுக்களைக் கொண்ட அவரது சினிமா பயணம் ஈடு இணையற்றது.
மறைந்த நடிகையின் இறுதிச் சடங்குகளின் போது சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள வீதிகள் முழுமையாக மூடப்படாது, ஆனால் தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.