சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கு சிறீதரன் எம்.பி. கடும் எதிர்ப்பு!

சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கு சிறீதரன் எம்.பி. கடும் எதிர்ப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்துக்கான எதிர்வினை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது லண்டனில் இருக்கும் அவர், கட்சியின் தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் கருத்துக்களை வெளியிட்டு வந்த சிறீதரன் எம்.பி., இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் மாவட்ட ரீதியாகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், குறிப்பாக நல்லூர் தேர்த்திருவிழா தினத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.