சஜித்துக்கு வாக்களித்தால் கிழக்கிலும் அதிக விகாரைகள் உருவாகும் - அரியநேந்திரன் குற்றச்சாட்டு!

சஜித்துக்கு வாக்களித்தால் கிழக்கிலும் அதிக விகாரைகள் உருவாகும் - அரியநேந்திரன் குற்றச்சாட்டு!

சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தால் கிழக்கிலும் அதிக விகாரைகள் உருவாகும்.

சஜித்தை ஆதரிக்கலாமா என்று சிந்தியுங்கள். அனுரகுமார திசாநாயக்க இணைந்த வடக்கு - கிழக​்கை துண்டாடிய அரசியல்வாதி என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் எல்லாரும் ஒன்று பட வேண்டிய தருணம் இது. இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் வந்த பிறகு ஜனாதிபதி தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் அவர்களது இடங்களில் பிரசாரம் செய்யாமல் வடக்கு கிழக்கில் தற்போது நிலை கொண்டுள்ளனர்.

தற்போது பொது வேட்பாளரின் தாக்கம் உணரப்பட்டு வருகின்றது. 

இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் அவர்களுக்கு விசேட பாடம் ஒன்றை புகட்ட வேண்டும்.

கடந்த கால ஜனாதிபதிகள் எமக்குச் செய்த துரோகத்திற்கு பரிசாகவே நாம் இந்த முறை சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கின்றோம் என்ற செய்தியை வௌிப்படுத்த வேண்டி இருக்கின்றது.

இப்போது போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் நல்லாட்சி காலத்தில் அதிக விகாரைகளை நிறுவியவர் ஆவர்.

நீங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தால் கிழக்கிலும் அதிக விகாரைகள் உருவாகும். எனவே, சஜித்தை ஆதரிக்கலாமா என்று சிந்தியுங்கள்

அனுரகுமார திசாநாயக்க இணைந்த வடக்கு கிழக்கை துண்டாடி மாகாண சபைத் தேர்தலை நடத்த காரணமாக இருந்தவர்.

அனுரகுமாரவை  ஆதரித்து வாக்கு கேட்டு வரும்  அரசியல்வாதிகளின் கோமாளித்தனத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார் 

தமிழ் தேசிய பொது கூட்டமைப்பின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று  மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், யோகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.