இலங்கையின் வளமான கடற்பரப்புக்கள் வெளிநாடுகள் கைப்பற்றும் சாத்தியம்?

புதிய கடற்தொழில் சட்டம் நிறைவேற்றப்படுமாயின் இலங்கையின் வளமான கடற்பரப்புக்களை வெளிநாடுகள் கைப்பற்றும் சாத்தியம் உள்ளதாக இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தினேஷ் சுரஞ்சன் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.

இலங்கையின் வளமான  கடற்பரப்புக்கள் வெளிநாடுகள் கைப்பற்றும் சாத்தியம்?

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற வட மாகாண மீனவ அமைப்புகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற மீனவ சமூகத்தை அப்புறப்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் கடல் வளத்தை தாரை வார்க்கும் நோக்கில் புதிய சட்டத்திருத்தம் இடம்பெறுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய கடற்தொழில் சட்டத்தை மீனவ சங்கங்களோ சமாசங்களோ கோராத நிலையில் சிலரது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்த புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுவதாக சந்தேகம் எழுகிறது.

1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கடற்றொழில் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து இழுவைமடித் தொழிலை முற்றாக தடை செய்யுமாறு பல தடவைகள் அரசாங்கத்திடம் கோரப்பட்ட போதிலும் அந்த விடயம் நிறைவேற்றப்படவில்லை.

எனினும், தற்போது மீனவ சமூகம் கோராத புதிய சட்ட திருத்தத்தை கொணடுவந்து வெளிநாட்டு படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் உள்நுழைய சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தினேஷ் சுரஞ்சன் பெர்னாண்டோ குற்றஞ்சுமத்தியுள்ளார்.