தமிழக மீனவர் பிரச்சினை : மாற்றான் தாய் மனப்போக்கில் செயற்படுவதா? மோடி வருகைக்கு மீனவ காங். போராட்டம்

2014ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழக மீனவர் மீது இலங்கை கடல் எல்லையில்  அடக்குமுறை அதிகரித்துள்ளது.

தமிழக மீனவர் பிரச்சினை : மாற்றான் தாய் மனப்போக்கில் செயற்படுவதா? மோடி வருகைக்கு மீனவ காங். போராட்டம்

இதனை வலியுறுத்தும் முகமாக பிரதமர் நரேந்திர மோடியின் ராமேஸ்வரம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாம்பன் பாலத்தில் கருப்பு பலூன் பறக்க விடும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணியினைச் சேர்ந்தவர்கள் இன்று (21) முன்னெடுத்தனர். 

இது தொடர்பாக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் பாம்பன் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தெரிவிக்கையில், "2022ஆம் ஆண்டில் 36 தமிழக படகுகள்,  264 மீனவர்களையும், 2023ஆம் ஆண்டில் 35 படகுகளும், 240 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். 

கடந்த 2 வாரத்தில் தமிழக மீனவர் 40 பேரை கைது செய்து இலங்கை யாழ்ப்பாண சிறையில் அடைத்தனர்.

2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் தமிழக மீனவர் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. 

பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.

கடந்த 10  ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட தமிழக படகுகளை  இலங்கை கடற்படை பறிமுதல் செய்து, அதில் 140 படகுகளை இலங்கை நீதிமன்ற உத்தரவின் படி அரசுடமையாக்கியுள்ளனர்.

அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து விறகுகளாகவும், இயந்திரங்களை பழைய இரும்பு கடைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

சிறை பிடித்த தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு பலமுறை பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. மீனவர் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துவதே இல்லை.

தமிழக மீனவர் பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடி மாற்றான் தாய் மனப்போக்கில் தான் கையாள்கிறார். எனவே, பிரதமர் மோடியின் மீனவர் விரோத போக்கை கண்டித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைமையில் அன்னை இந்திரா காந்தி பாம்பன் சாலைப் பாலத்தில் இன்று (21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மோடி திரும்பச் செல்ல வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும், கருப்பு பலூன்களும் பறக்க விடப்பட்டன.

காங்., முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி 2-ம் கட்ட யாத்திரையை அசாம் மாநிலத்தில்  மேற்கொண்டுள்ளார். அசாம் மாநிலம் லக்கிம்பூர் நகரில் அவரை வரவேற்று வைத்துள்ள பேனர்கள்,  போஸ்டர்களை பாஜகவினர் கிழித்து சேதப்படுத்தி, யாத்திரையில் கலந்து கொள்ள சென்ற சில வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதை அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

இப்போராட்டத்தில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலர் ரவி, துணை தலைவர் ரோவன் தல்மேதா, பொதுச் செயலர் ஜவஹர்,  மீனவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆணையர் ஜெரோம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கடந்த ஜன.19ஆம் திகதி தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்தார். 

அதில் 2 நாள் ஆன்மிக பயணமாக நேற்று மாலை ராமேஸ்வரம் வந்தார். இன்று காலை தனுஷ்கோடி சென்று கோதண்டராமர் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர் அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் மதுரைக்கு சென்று டெல்லிக்கு திரும்பினார்.

இந்தநிலையில், மோடி டெல்லிக்கு திரும்பிச் சென்ற அதே நேரத்தில் இன்று நண்பகல் பாம்பன் பாலத்தில் காங்கிரஸ் தரப்பினர் கருப்பு பலூன் பறக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.