தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து பிரதமர் மோடிக்கு விளக்கக் கடிதம் அனுப்பத் தயார்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்து எமது நிலைகள் குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றினை எட்டுவதற்கு தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த ஏழு கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை அனுப்ப தயாராக உள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்றையதினம் அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான சநத்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “உடனடியாக கடிதத்தினை அனுப்புவதா, இல்லையா என்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடியே தீர்மானம் எடுக்கவுள்ளோம்.

சில கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு வருகை தராமையின் காரணமாக இறுதி முடிவு எட்டப்படவில்லை.

13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது.

தற்பொழுது நாட்டின் நிலை குறித்தும், தமிழ் மக்களது நிலை குறித்தும் 13இனை அமுல்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் அவருடன் பேச நாம் ஆவலாக இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை தமிழரசு கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம்.

கட்சி தலைவர்கள் அனைவரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கின்ற பொழுதுதான் இது முழுமையான செயல்வடிவம் பெறும்” என அவர் மேலும் தெரிவித்தார்