உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டி - எம்.ஏ.சுமந்திரன்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டி - எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை தனித்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்” இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தாம் முற்றும் மாறுபட்ட நிலைமையினையே எதிர்பார்ப்பதாகவும், எனவே தாம் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு இருப்பினும் ஒரு கட்சி தனியாக நிர்வாகத்தை அமைப்பது என்பது சாத்தியப்பாடு குறைந்த அளவில் காணப்படுவதால், தேர்தலில் பின்னர் தாம் மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து நிர்வாகங்களை அமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.

சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், வட்டாரக்கிளை தலைவர்கள், மாவட்ட கிளை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.