17 வயது யுவதியின் கொலை - தொடர்புடையவர்களை தேடி பொலிஸார் விசாரணை!

17 வயது யுவதியின் கொலை - தொடர்புடையவர்களை தேடி பொலிஸார் விசாரணை!

கரந்தெனிய – தல்கஹவத்த பகுதியைச் சேர்ந்த 17 வயது யுவதியின் கொலையுடன் தொடர்புடையவர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த யுவதியின் சடலம் எல்பிட்டி – தலாவ பகுதியிலுள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து நேற்று (09) மீட்கப்பட்டது. 

சடலமாக மீட்கப்பட்ட யுவதி தமது சகோதரியின் கணவருடன் வசித்து வந்ததாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த யுவதி மீண்டும் தமது வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபருக்கு எதிராக யுவதியும் அவரது தாயும் கடந்த 6 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக சென்று கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த யுவதியின் சகோதரியின் கணவர் அவரை மீண்டும் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்பின்னர் அவர் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைத்திருக்கவில்லை என அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், சகோதரியின் கணவருடன் குறித்த யுவதி வசித்து வந்ததாக கூறப்படும் எல்பிட்டி – தலாவ பகுதியிலுள்ள தேயிலை தோட்டமொன்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.