நெற்செய்கைக்கு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் வேலைத்திட்டம்!

நெற்செய்கைக்கு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நெற்செய்கைக்கு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் வேலைத்திட்டம்!

விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் இந்த வருடத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நெற்செய்கை மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள விவசாய சேவை நிலையங்களுக்கு தலா ஒரு ட்ரோன் வீதம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல், பொலன்னறுவை, வவுனியா மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு 100 ட்ரோன்கள் வழங்கப்படவுள்ளன. 

இரண்டாவது கட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் 563 விவசாய சேவை நிலையங்களுக்கு தலா ஒரு ஆளில்லா விமானத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி பூச்சி மருந்து தெளித்தல், உரம் தெளித்தல், நெல் விதைத்தல், வயல்களை அளத்தல், நோய்களை கண்டறிதல் போன்ற வேலைகளை இலகுப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.