விகாரை ஒன்றினால் ஏற்படவிருந்த இனமுறுகலை தடுத்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்!

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் உத்தேச பௌத்த விகாரையால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இடையில் இனமோதல் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விகாரை ஒன்றினால் ஏற்படவிருந்த இனமுறுகலை தடுத்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்!

இதுபற்றி அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து குறித்த விகாரையின் நிர்மாண பணிகள் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன.

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த பௌத்த விகாரையின் பணிகள் இடைநிறுத்தப்பட்ட போதும் இந்த விடயம் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. 

நிலாவெளி பெரியகுளம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களும் 02 சிங்கள குடும்பங்களும் வசித்து வருகின்றன. 

அங்கு வாழும் தமிழ் மக்கள் விகாரையின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கவிருப்பதை நிறுத்துமாறு கோரி அண்மையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தனர். 

இந்த நிலையில் விகாரையின் நிர்மாணப்பணி தொடருமாக இருந்தால் பிரதேசத்தில் பாரிய இனமுறுகல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனவே, கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களின் நலன்களை பேணும் ஆளுநர் என்ற அடிப்படையில் இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் முகமாக உத்தேச விகாரையின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளதாக அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.