யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வன்முறை - 31 பேர் இதுவரையில் கைது!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் 31 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வன்முறை - 31 பேர் இதுவரையில் கைது!

அச்சுவேலி – நீர்வேலி பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய நபர்களை கலைப்பதற்காக பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை நடத்தியுள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்வேலி பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக நேற்று இரவு அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய  விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போது, பொலிஸாரின் கட்டுப்பாடுகளை மீறி தொடர்ந்தும் அந்த பகுதியில் பொதுமக்கள் செயற்பட்டுள்ளதாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினரால் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

பெண்ணொருவரின், புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பிலேயே குறித்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

update >>>

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் 31 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்களின் காணொளிகளை கணினியின் ஊடாக செம்மையாக்கம் செய்து சமூக ஊடங்களில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்களை சந்தேகித்து குறித்த பகுதியைச் சேர்ந்த 50க்கும் அதிகமானோர் நேற்றிரவு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, தாக்குதல்களுக்கு உள்ளான இரண்டு இளைஞர்களையும் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்க முற்பட்ட போது மீண்டும் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாரால் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது, காயமடைந்த பொலிஸ் உப பரிசோதகரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதானவர்களில் 25 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.