கொக்குவில் இந்துக்கல்லூரியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 36வது நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது!

கொக்குவில் இந்துக்கல்லூரியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களின் 36வது நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 

கொக்குவில் இந்துக்கல்லூரியில்  படுகொலை செய்யப்பட்ட  பொதுமக்களின் 36வது  நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது!

கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தின் முன்பாக இன்றைய தினம் 24.10.2023 காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

இந் நினைவேந்தலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

 இந்நிகழ்வில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்திற்கும் – விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில், ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பல மக்கள் பாதுகாப்புக்கருதி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தார்கள்.

1987 ஒக்டோபர் 24ம் திகதி காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக் கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலை கட்டிடங்கள் மேல் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டனர்.

இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

உரிய முறைப்படி தகனம் செய்வதற்கான சூழ்நிலையில்லாததால் இறந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.