ஞாபகத் திறன் போட்டியில் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி!

மனித உடலின் 423 உள் உறுப்புகளின் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி சோழன் உலக சாதனை படைத்த உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட பொகவந்தலாவையைச் சேர்ந்த பள்ளி மாணவி 8 வயது கனிஷிகா சிறப்பு பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

பொகவந்தலாவையைச் சேர்ந்த சங்கரதாஸ் மற்றும் பாமினி தம்பதிகளின் புதல்வியான  கனிஷிகா பொகவந்தலாவை புனித ரோசரி மகா வித்தியாலயத்தில் 2ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். 

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க தன் தொடர் முயற்சியினால் மனித உடலின் 423 உள் உறுப்புகளை படத்தில் அடையாளம் காட்டியவாறு 4 நிமிடங்களில் மனப் பாடமாக ஒப்புவித்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார். 

இதன் மூலம் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட குழந்தைகளின் வரிசையில் இடம் பிடித்தார் கனிஷிகா. 

இதற்கான உலக சாதனை நிகழ்வு நேற்று (16) பொகவந்தலாவையில் அமைந்துள்ள புனித ரோசரி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

இந்த சோழன் உலக சாதனை முயற்சியை அந்த நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் திரு.ஸ்ரீநாகவானி ராஜா நடுவராக நேரில் கண்காணித்து உறுதி செய்தார் 

சோழன் உலக சாதனை படைத்த பாடசாலை மாணவியை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.