காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர்  ஒருவர்  உயிரிழப்பு!

காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர்  ஒருவர்  உயிரிழப்பு!

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுட்பட்ட பொண்டுகள் சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர்  ஒருவர்  உயிரிழந்தார்.

கிரான் புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை அம்பிகை ராசா (வயது  60) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் புலிபாய்ந்தகல் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு நேற்று அதிகாலை துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளையில் பனை மரத்தின் மறைவில் நின்ற காட்டு யானை தாக்கிய போதே அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கோரளைப்பற்று தெற்கு கிரான் பகுதிக்குரிய திடீர் மரண விசாரணை அதிகாரி கே.பவளகேசன் சம்பவ இடத்திற்கு சென்று  சடலத்தை பார்வையிட்டதுடன்  விசாரணைகளை மேற்கொண்டதுடன்  பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய் கிழமை சடலம் மீதான சட்ட வைத்திய பரிசோதனை நிறைவடைந்த பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் இம் மாதம்  2 குடும்பஸ்த்தர்கள் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.