பெருந்தோட்டப் பகுதி வாழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு . ரணில்

பெருந்தோட்டப் பகுதி வாழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு . ரணில்

விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காணிப் பிரச்சினை உட்பட விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அதேபோல் பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10 - 15 வருடங்களுக்குள் பெருந்தோட்ட நிறுவனங்களில் குத்தகைக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் விவசாயத்துறையை நவீன மயப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல அரசாங்கம் முற்படுமாயின் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான புதிய குத்தகை வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும் அனைத்து நிறுவனங்களினதும் செயற்பாடுகளும் வரவேற்கத்தக்க வகையில் காணப்படவில்லை என்பதால் குத்தகைக் காலத்துக்கான புதிய அடித்தளம் ஒன்றை கட்டமைக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவிற்கு பணிப்புரை விடுத்தார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளை மதிப்பிடுதல் மற்றும் புதிய குத்தகை கட்டமைப்பை உருவாக்குவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பை புதுபிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தல் விடுத்தார்.

காணிகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் அரசாங்கத்தின் அனுமதியின்றி தமது பங்குகளை விற்பனை செய்வதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இடமளிக்கக்கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த இடங்களில் மாணிக்கல் அகழ்வது பாரிய பிரச்சினை என்பதால் இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பெருந்தோட்ட வீட்டுப் பிரச்சினை மற்றும் தேயிலை இறப்பர் தெங்கு உற்பத்தி சார்ந்த பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

தொழிலாளர்களுக்கு காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதோடு காணி மீட்பு ஆணைக்குழுவின் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

அதேபோல் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.