கொழும்பில் கைதிகளுக்கு சயனைட் நச்சு வழங்கிய சந்தேகநபர் குறித்து தகவல்!

  கொழும்பில் கைதிகளுக்கு சயனைட் நச்சு வழங்கிய சந்தேகநபர் குறித்து தகவல்!

கொழும்பு - ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளுக்கு சயனைட் கலந்த பாலை பருகுவதற்கு வழங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக உறுப்பினர் பூங்கொடி கண்ணாவின் உதவியாளர் என கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த 24ஆம் திகதி ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பூங்கொடி கண்ணாவின் தரப்பினரான இரண்டு சந்தேக நபர்களுக்கு இவ்வாறு சயனைட்  கலந்த பால் வழங்கப்பட்டது. 

இதில் பாதிக்கப்பட்ட இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் பிறிதொரு பாதாள உலக உறுப்பினர் குடு செல்வியின் தரப்பினர் காயமடைந்த நிலையில், சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பூங்கொடி கண்ணாவின் தரப்பினரை பார்வையிடச் சென்றவர்களில் ஒருவருக்கு, குடு செல்வியின் தரப்பினர் பணம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரின் ஊடாக சயனைட் திரவத்தை சிறைக்கூடத்தில் இருந்த பூங்கொடி கண்ணாவின் தரப்பினருக்கு வழங்க திட்டமிடப்பட்டிந்ததுடன் அதற்காகவே அந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.