மலையக மாணவர்களுக்கு மடிக்கணிணி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

மலையக மாணவர்களுக்கு மடிக்கணிணி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

மலையகப் பகுதிகளிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணிணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்தார்.

இந்திய உயர்தானிகர் சந்தோஸ் ஜா உடன் மலையக கல்வி தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இரான் செந்தூரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையகப்பகுதியில் வாழும் பெரும்பாலான மாணவர்கள் இன்று பொருளாதார நெருக்கடியில் வாழ்வதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

பலர் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் தங்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்ள முடியாமை காரணமாக பல்கலைக்கழக கல்வியினை இடை நடுவில் கைவிட்டு தொழில் நோக்கில் சென்று விடுகின்றனர்.

இது மலையகத்தை பொருத்தவரையில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றன.

மலையகம் மாற்றம் பெற வேண்டும் என்றால் அது கல்வியில் தான் உள்ளது என்பது எவரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது இந்தநிலையில் மலையக மாணவர்களின் கல்வியினை தொடர்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மலையக அரசியல் தலைவர்கள் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.

அண்மையில் நடைபெற்ற பேச்சிவார்த்தையில் மலையக மாணவர்களுக்கு மடிக்கணிணி என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.

அதனை பெற்றுக்கொள்வதற்கு பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்களுக்கு வசதியின்மையினால் நாங்கள் இந்திய உயர்தானிகரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தோம்.

மலையகத்திலிருந்து தெரிவான அனைத்து மாணவர்களுக்கும் தங்களுமைய கற்றலை மேம்படுத்துவதற்கு ஒரு மடிக்கணிணியினை பெற்றுத்தர வேண்டும்.

அதிலும் குறிப்பாக பெருந்தோட்ட மாணவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் பெரும்பாலானவர்கள் தோட்டத்தில் இருந்தாலும் பலர் தோட்டத்தில் வேலை செய்வதில்லை.

அது மாத்திரமன்றி பலர் தோட்டத்தை விட்டு நகர்பகுதிகளுக்கு வந்து வெவ்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

எனவே, அவர்களும் பொருளாதார ரீதியில் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதனால் அவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம் அதனையும் அவர் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதேநேரம் அது மாத்திரமின்றி இந்திய புலமைப்பரிசில் வழங்கும் போது தோட்ட மாணவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

ஆனால், தோட்ட நிர்வாகத்திடம் கடிதங்கள் பெற்றுக்கொள்ள செல்லும் போது அவர்கள் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மாத்திரம் தான் வழங்குகின்றனர்.

ஆனால் இன்று தோட்டத்தில் வேலை செய்யாத பலருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

ஆகவே அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தோம்.

அதனையும் அவர் ஏற்றுக்கொண்டார். அதேநேரம் இன்று கிளங்கன் வைத்தியசாலை தவிர பல வைத்தியசாலைகள் மலையக பகுதியில் காணப்படுகின்றன.

எமது மக்கள் இன்றுள்ள காலநிலையில் அங்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே தோட்ட வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தோம்.

ஆகவே, மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த கல்விக்கான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு முட்டுக்கட்டையிடாது அதனை நிவர்த்தி செய்து கொள்வதற்கு தேவையினை நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்" என அவர் குறிப்பிட்டார்.