வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க நடவடிக்கை - ஜனாதிபதி பணிப்புரை

வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க நடவடிக்கை - ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு கஜிமா வத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும், வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு கஜிமா வத்தை வீட்டுப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் வீடுகள் வழங்கும் கொள்கைகள் மற்றும் அளவுகோல்களுக்கு அமைவாகவே குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரப் பகுதிக்குள் அரசாங்கத்திற்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாத கட்டடங்கள் மற்றும் காணிகள் தொடர்பில் ஆராய்ந்து அந்த காணிகளை அபிவிருத்தி செய்து வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச துறையின் தலையீட்டுடன் தனியார் முதலீடுகளின் ஊடாக இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கொழும்பு நகர எல்லையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுவரும், அரசாங்க வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, மேலும் வீடமைப்புத் திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது விளக்கினார்.

தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் இந்தப் பணிகள் சிரமமானதாக இருந்தாலும் பொருத்தமான முறைமையைத் தயாரிக்குமாறு அவர் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.