அநுரவின் புதிய அமைச்சரவை தொடர்பான அறிவிப்பு!

அநுரவின் புதிய அமைச்சரவை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதவியேற்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோர் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், தற்போது பிரதமராக முன்னர் பதவி வகித்து வந்த தினேஸ் குணவர்தன பதவி விலகியுள்ள நிலையில் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு அமைச்சரவை நியமிக்கப்படும் என்றும் ஹரினி இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி அநுரவின் அமைச்சரவையில் நான்கு பேர் கொண்ட குழு இருப்பதாகவும் ஹரினி மேலும் சுட்டிக்காட்டினார்.  

அதன் பிரகாரம் நாளைய தினம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான கலந்துரையாடலின் பின்னர் நான்கு பேர் கொண்ட அமைச்சரவை ஒன்றை அமைப்பது குறித்தும், பிரதமர் பதவிக்கு ஹரினி அமரசூரியவை நியமிப்பது குறித்தும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கமொன்று அமைக்கப்படும் வரை ஜனாதிபதியின் கீழ் பதினைந்து அமைச்சுக்களும், ஏனைய மூவரின் கீழும் தலா ஐந்து அமைச்சுக்களும் செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.