அவசர தேவைக்கு மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பியுங்கள் - இல்லையேல் ஒக்டோபர் வரை காத்திருங்கள் - டிரான் அலஸ்

அவசர தேவைக்கு மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பியுங்கள் - இல்லையேல் ஒக்டோபர் வரை காத்திருங்கள் -  டிரான் அலஸ்

கடவுச்சீட்டு அவசரமாக தேவைப்பட்டால் மாத்திரம் தற்போது விண்ணப்பிக்கவும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடவுச்சீட்டு அவசரமாக தேவைப்படாதவர்களை ஒக்டோபர் வரை காத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒக்டோபர் மாதத்திலேயே சர்வதேசதராதரத்துடனான கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சிவில் விமானப்போக்குவரத்து அமைப்பின் நியமங்களை பூர்த்தி செய்யும் புதிய இ-கடவுச்சீட்டு ஒக்டோபர் மாத இறுதியிலேயே வழங்கப்படும் என தெரிவித்துள்ள அவர் இது உலகளாவிய கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கையின் நிலைமையை மேம்படுத்த உதவும் என தெரிவித்துள்ளார்.

புதிய கடவுச்சீட்டில் உரிமையாளரின் அனைத்து விடயங்களையும் சேமித்துவைக்கும் மைக்ரோசிப் காணப்படும் இது உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் உரிமையாளர் குறித்த தகவல்களை பெறுவதை இலகுவாக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கடவுச்சீட்டு காரணமாக இலங்கையர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து நான் தனிப்பட்ட ரீதியில் அறிந்துகொண்டுள்ளேன் விமான நிலையங்களில் சோதனைகள் இடம்பெறும்போது எங்கள் மக்கள் எதிர்காலங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள மாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.