தரம் 6 மாணவன் மீது தாக்குதல் - விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

தரம் 6 மாணவன் மீது தாக்குதல் - விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

யாழ்ப்பாணம் - நெல்லியடி மத்திய கல்லூரியில் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 6 இல் இணைந்துக்கொண்ட புதுமுக மாணவன் ஒருவன் மீது கடந்த 22 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், பாடசாலை அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிமனைக்கு ஆளுநரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் மாணவன் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை ஆளுநரினால் நேரடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய, குறித்த மாணவனை ஆளுநர் செயலகத்தின் உத்தியோகத்தர் குழாம் நேரில் சென்று நலன் விசாரித்ததுடன், மாணவன் மீதான தாக்குதல் தொடர்பிலும் அறிந்துக்கொண்டனர்.