விடுதலைப் புலிச் சின்னம் பொறித்த ஆடையுடன் கைதான இளைஞனுக்கு பிணை!

கடந்த மாதம் மாவீரர் தினத்தில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுடைய புகைப்படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

விடுதலைப் புலிச் சின்னம் பொறித்த ஆடையுடன் கைதான இளைஞனுக்கு பிணை!

இன்று குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து  இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தருணத்தில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

கொடிகாமத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவர் கடந்த மாவீரர் தினத்தன்று விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் படம் பொறித்த ஆடையுடன் தோன்றியமைக்காகப் நவம்பர் 28ம் திகதி கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.