இந்தியாவில் பரவும் கொடிய வைரஸ் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இந்தியாவில் பரவும் கொடிய வைரஸ் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இந்தியா கேரளா மாநிலத்தில் நிபா வைரஸினால் (Nipah Virus) பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜோர்ஜ் (Veena George) தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த சிறுவனோடு தொடர்பு கொண்டவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ், பன்றிகள் மற்றும் பழ வெளவால்கள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக் கூடியது என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

அதேவேளை, அசுத்தமான உணவு மற்றும் நோய்த் தாக்கத்துக்கு உள்ளான நபருடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இது பரவுகிறது.

இது, ஒரு சர்வதேச தொற்றுப் பரவலை ஏற்படுத்தக் கூடியது என்பதால் உலக சுகாதார தாபனத்தால் முன்னுரிமை நோய்க்கிருமியாக விபரிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் கேரள மாநிலத்தில் முதன்முதலாக 2018ஆம் ஆண்டு பதிவாகியிருந்ததுடன் இதுவரை 12இற்கும் அதிகமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.