சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை!

சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை!

கடும் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக இன்று (24) ஹப்புத்தளைக்கும் தியத்தலாவைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய சவுக்கு மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக வீதி முற்றாக தடைப்பட்டிருந்ததாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இப்பகுதியில் உள்ள சவுக்கு மரங்கள் மற்றும் பாரிய மரங்கள் எந்த நேரத்திலும் விழும் அபாயம் காணப்படுவதாக சாரதிகளும் பிரதேசவாசிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும், மாற்று வீதியாக தியத்தலாவை உடபர கஹகொல்ல ஊடாக பண்டாரவளை வீதியை பயன்படுத்துமாறும் தியத்தலாவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர தயாரத்ன தெரிவித்தார்.

தியத்தலாவை இராணுவம், தியத்தலவை பொலிஸார், ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை, ஹப்புத்தளை பிரதேச சபை, ஹப்புத்தளை பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனர்த்த பிரிவின் குழுக்கள் இணைந்து பிரதான வீதியில் வீழ்ந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.