கொக்குத்தொடுவாய் மனித எச்சங்களில் துப்பாக்கி சன்னம் மற்றும் இராணுவ முகாம் எல்லை கம்பிகள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படும் மேலும் ஏழு மனித எச்சங்கள் நேற்று (10) அடையாளம் காணப்படுள்ளன.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 6வது நாளான நேற்று, மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்தோடு ஏற்கனவே இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் நிறைவு நாட்களில் அடையாளம் காணப்பட்ட நான்கு மனித எச்சங்கள் அதழ்தெடுக்கப்படாது உள்ளன. 

ஏற்கனவே இரண்டு கட்டங்களிலும் முழுமையாக அகழ்ந்து வெளியே எடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் இவை முழுமையாக வெளியே அகழ்ந்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஆறாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் நேற்று (10) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. 

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் தடயவியல் பொலிசார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன.

இரண்டாம் நாளாகவும் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின் மனித உரிமைகள் அலுவலர் செல்ரின் அகிலன் அகழ்வு பணிகளை கண்காணிதார். 

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக கொக்கிளாய் - முல்லைத்தீவு பிரதான வீதிக்கு கீழான பகுதி அகழப்பட்டு, அகழ்வாய்வுச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் மூன்று மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

 மேலும் அந்த எலும்புக் கூட்டுத்தொகுதிகளோடு துப்பாக்கி சன்னங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்படும் வேலிகம்பிகளின் துண்டுகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஏழு மனித எச்சங்களையும் வரும் நாட்களில் முழுமையாக வெளியே எடுக்க முடியும் என அகழ்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் மனித உரிமை சட்டத்தரணி நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

குரல் பதிவுகளில் இன்று என குறிப்பிடப்படும் பதங்கள் நேற்றைக்குரியது என்பதை கருத்தில் கொள்ளவும்.