வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் திடீர் தீ பரவல்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே குறித்த தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மின்னொழுக்கினால் குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே இயந்திர அறையினுள் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட திடீர் தீப் பரவலினால் எக்ஸ்ரே இயந்திரத்தின் உப இயந்திரங்கள் மற்றும் கணினி தொகுதி உட்பட பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியும் முற்றிலுமாக எரிந்து சேதமாகியுள்ளது.
குறித்த தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் அதீத முயற்சிகளை மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், முன்னேற்பாடுகளை மேற்கொண்ட ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச சபைகளின் செயலாளர்கள், களத்தில் பணியாற்றிய மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை ஆகியோர் மேற்கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதேச சபை தீயணைப்பு வாகனத்தினை இயங்கு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை அண்மைக் காலங்களில் உரிய தரப்பினருடன் இணைத்து ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.