கோட்டாபயவின் சர்ச்சைக்குரிய வழக்கின் பிரதான சாட்சிக்கு பிடியாணை!

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதான சாட்சியை கைது செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கோட்டாபயவின் சர்ச்சைக்குரிய வழக்கின் பிரதான சாட்சிக்கு பிடியாணை!

2019 தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, வெள்ளை வேனில் கடத்தப்பட்ட மக்களை, முதலைகளுக்கு உணவாக வழங்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த சர்ச்சைக்குரிய கூற்றை வெளியிட்டமை தொடர்பில், செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றவர்கள் உட்பட முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கும் எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் இந்த வழக்கின் பிரதான சாட்சியான எஸ்.ஏ.சரத் குமார என்பவர், நீதிமன்றத்தை வேண்டுமென்றே தவிர்த்து வருவதை அடுத்தே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த, அவர் மீது பிடியாணை பிறப்பித்துள்ளார்.

குற்றசாட்டப்பட்டவர்களுடன் செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்றதால், அந்த சாட்சியின் சாட்சியங்கள் விசாரணைக்கு இன்றியமையாதவை என்று முன்னதாக பிரதி மன்றாடியார் நாயகம் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்தநிலையிலேயே குறித்த சாட்சிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.