முக்கிய திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும்!

இலங்கையின் பொருளாதாரத்துக்கான முக்கியமான திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும்!

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் வீட்டுத் திட்டங்களை நகருக்கு வெளியே நிர்மாணித்து, நகரத்தில் பெறுமதியான காணிகளை முதலீட்டிற்காக வழங்கினால், நாட்டின் பொருளாதாரம் உயர்நன்மைகளை அடைய முடியும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி, அந்த இடத்தை வர்த்தக வாய்ப்புக்காக வழங்கினால், நாட்டின் பொருளாதாரத்துக்கு அனுகூலமாக அமையும்.

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு, வெருகளாறு வரையிலான சுற்றுலா நகரங்களை உருவாக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

முறையான நகர திட்டமிடல் திட்டங்களின் மூலம் ஒவ்வொரு நகரத்தையும் அழகான நகரமாக மாற்ற புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த நகர மேம்பாட்டு பணிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பொறியாளர்கள் தேவைப்படுவர்.

மேலும், கட்டடக் கலைஞர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களும் தேவைப்படுவர்.

இதனூடாக நிர்மாணத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய தொழில்வாய்ப்புகள் உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.