ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இஷாக் ரஹ்மான் நியமனம்!

ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இஷாக் ரஹ்மான் நியமனம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் நியமனம் இன்று (19) சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.பி.ஏக்கநாயக்க ஆகியோர் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அத்தோடு காலி மாவட்ட அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் பி.தேவக வீரசிங்க ஆகியோர் நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, கொழும்பு மாவட்டத் தலைவர் ரவி கருணாநாயக்க, முன்னாள் அமைச்சர் விஜித் விஜியமுனி சொய்சா உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இதில் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்டு 295 மண்டல அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கடிதங்கள் வழங்கப்பட்டன.