யாழ். நீதிமன்ற வளாகத்தில் பெருந்தொகை பொலிஸார் குவிப்பு! 

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனின் நீதிமன்ற விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் இன்றைய தினம் (24) இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இளைஞன் உயிரிழந்தது, யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால், கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றன.  

கடந்த திங்கட்கிழமை இளைஞனின் உடற்கூற்று பரிசோதனை யாழ்.போதனா வைத்திசாலையில் மேற்கொள்ளப்பட்ட போது, நீதவான் நேரில் சென்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று, சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகஸ்தர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்றுக் கொண்டார்.

இந்தநிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் (24) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள நிலையில் , சிறைச்சாலை அத்தியட்சகர், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கொலையான இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகி தமது சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளனர். 

அதேவேளை, சட்ட வைத்திய அதிகாரி, உடற்கூற்று பரிசோதனை அறிக்கையையும் நீதிமன்றில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்காக 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.