காணாமல் போன 17 வயதுடைய யுவதி தேயிலை தோட்டமொன்றில் இருந்து சடலமாக மீட்பு

காணாமல் போன 17 வயதுடைய யுவதி தேயிலை தோட்டமொன்றில் இருந்து சடலமாக மீட்பு

காணாமல் போயிருந்ததாக கூறப்பட்ட 17 வயதுடைய யுவதி ஒருவர் காலி, எல்பிட்டிய - தலாவ பகுதியிலுள்ள தேயிலை தோட்டமொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி காலி, கரந்தெனிய - தல்கஹாவத்தை பகுதியை சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி தமது சகோதரியின் கணவருடன் வசித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த யுவதி மீண்டும் தமது வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபருக்கு எதிராக யுவதியும் அவரது தாயும் கடந்த 6 ஆம் திகதி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக சென்று கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டியொன்றில் வந்த யுவதியின் சகோதரியின் கணவர் அவரை மீண்டும் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அவர் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைத்திருக்கவில்லை என அவரது உறவினர்கள் காவல்நிலையத்துக்கு  அறிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், தமது சகோதரியின் கணவருடன் அவர் வசித்துவந்ததாக கூறப்படும் எல்பிட்டிய – தலாவ பகுதியிலுள்ள வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவிலுள்ள தேயிலை தோட்டமொன்றிலிருந்து குறித்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய் 38 வயதுடைய சந்தேக நபர் தற்போது அந்த பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.