ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 60க்கும் மேற்பட்ட கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு!

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 60க்கும் மேற்பட்ட கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு!

முன்னாள் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனிய, ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் நிதி மோசடி குற்றவாளியை சட்டவிரோதமாக விடுவிக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (10) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், உபுல்தெனிய, வழக்கமான நடைமுறைகளை மீறி, நீதி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வெசாக் மன்னிப்புப் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத கைதியான அதுல திலகரத்னவை விடுவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட நபர் மே 2 ஆம் திகதி அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை உத்தரவினை எதிர்கொண்டிருந்தார்.

உபுல்தேனியவின் நடவடிக்கைகள் நீதித்துறை செயல்முறையையும் ஜனாதிபதி மன்னிப்பு நெறிமுறையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக பீரிஸ் மேலும் குற்றம் சாட்டினார்.

மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் சுதந்திர தினத்தின் போது சட்டத்தை மீறி இதேபோன்ற விடுதலைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துக்காட்டினார்.

முதற்கட்ட விசாரணைகளில் 57 கைதிகள் 2024 டிசம்பரில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகவும், 2025 சுதந்திர தினத்தன்று மேலும் 11 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.