தகாத உறவில் பிறந்த குழந்தையை கொன்று புதைத்த முல்லைத்தீவு பெண் - மூவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும்  பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் அதனை கொலை செய்த குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். 

குறித்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்  

குறித்த பெண்ணுடன் மூவரை கைது செய்துள்ளனர்.

குழந்தையை குறித்த பெண்ணின் வீட்டில் பிரசவித்து பொலித்தீன் பையினால் சுற்றப்பட்டு கொண்டு சென்று புளியம்பொக்கணை பெரியகுளம் பகுதியில் எரித்ததாகவும், பெண்ணுடன் உடந்தையாக செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் கிறிஸ்தவ பாஸ்ரர் ஒருவர் குழந்தையை எரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே, குறித்த பகுதிக்கு இன்று (19) விஜயம் செய்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், சம்பவ இடத்தினை பார்வையிட்ட போது, குழந்தையை கொண்டு சென்று எரித்ததாக கூறப்படும் பகுதியில் இருந்து சில தடயப்பொருட்களை புதுக்குடியிருப்பு பொலிஸார் மீட்டுள்ளதாக நீதிபதியிடம் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து தடய பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணும், பெண்ணின் தாயாரும், பாஸ்ரர் உட்பட மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பெண் (வயது-29) விசுவமடு இளங்கோபுரம் பகுதியிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.